×

மதுரையில் கத்திமுனையில் சினிமா பைனான்சியரை காரில் கடத்தி 34 பவுன் நகைகள் பறிப்பு: ஒருவர் கைது; 4 பேருக்கு வலை

மதுரை: மதுரையில் சினிமா பைனான்ஸ் அதிபரை காரில் கடத்தி 34 பவுன் நகையை பறித்த கொள்ளையனை போலீசார் கைது செய்தனர். மதுரை, சதாசிவம் நகரைச் சேர்ந்தவர் பிரேம்குமார் (43). இவர் சினிமா படங்களுக்கு பைனான்ஸ் செய்து வருகிறார். ஜல்லிக்கட்டு பேரவை மாவட்டத்தலைவராகவும் உள்ளார். பிரேம்குமார் நேற்று முன்தினம் மாலை காரில் பாண்டிகோவில் ரிங் ரோட்டிற்கு வந்தார். அங்குள்ள கடைக்குச் சென்றபோது திடீரென வந்த 5 பேர் கும்பல்,அவரை அரிவாள், கத்திமுனையில் சுற்றிவளைத்து, காரில் கடத்தியது. கார் சிவகங்கை மாவட்டம் இடையமேலூர் புதுப்பட்டி கண்மாய் அருகே சென்றபோது, அந்த கும்பல் பிரேம்குமாரிடம் ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டியது. அவர், பணம் இல்லை என கூறவே, வீட்டில் இருக்கும் நகைகளை எடுத்து வந்து கொடுக்கச் சொல். இல்லையென்றால் கொலை செய்து விடுவோம் என மிரட்டியுள்ளனர்.

இதனால் அவர் மனைவிக்கு போன் செய்து, ‘வரும் நபரிடம் நகைகளை கொடுத்து அனுப்பு’ என கூறியுள்ளார். அதன்படி கும்பலில் ஒருவர் டூவீலரில் பிரேம்குமாரின் வீட்டுக்குச் சென்று 34 பவுன் நகைகளை வாங்கிக் கொண்டு தலைமறைவானார். பின்னர் அந்த கும்பல் அவரை கே.கே.நகர் பகுதியில் நேற்று காலையில் இறக்கி விட்டு தப்பியது. புகாரின்படி மாட்டுத்தாவணி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். அப்போது, கடத்தலில் ஈடுபட்ட மேலப்பனங்காடி குண்டு சரவணன் (42) என தெரிந்தது. ஒத்தக்கடை பகுதியில் பதுங்கியிருந்த அவரை கைது செய்து, 34 பவுன் நகைகளை போலீசார் மீட்டனர். 4 பேரை தேடி வருகின்றனர்.

The post மதுரையில் கத்திமுனையில் சினிமா பைனான்சியரை காரில் கடத்தி 34 பவுன் நகைகள் பறிப்பு: ஒருவர் கைது; 4 பேருக்கு வலை appeared first on Dinakaran.

Tags : madurai ,Finance ,
× RELATED பெரியார் பஸ் ஸ்டாண்ட் வணிக வளாக...